Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை

சங்க கால தமிழகத்தில் பல்வேறு குடியினர் பரவலாக வாழ்ந்து வந்திருந்ததை சங்கப் பாக்கள் மூலம் அறிகிறோம். இவர்களில் பஞ்வர், கவுரியர், குடவர், குட்டுவர், அதியர், உதியர், மலையர், மழவர், மறவர், இளையர், பூழியர்,  வில்லோர், கொங்கர், குறவர், பரதவர்,  கோசர், ஆவியர், ஓவியர், அருவர், அண்டர், இடையர், தொண்டர், திரையர், களவர், வடுகர், ஆரியர், மௌரியர், யவனர் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலே சுட்டப்பட்ட குடிகளில் அண்டர் குடியினர் பற்றி சங்க இலக்கியங்கள் சொற்பளவிலான குறிப்புகளையே தருகின்றன.
அண்டர்கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன் (கு.117:3-4)
அண்டர்கள் கட்டிய கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் எருதைப்போல தோன்றும் துறைவன்’ என்றும்
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்பல்ஆ பயந்த நெய்யின் (கு.210:1-2)
கண்டீர நாட்டை ஆண்ட நள்ளியினது காட்டில் வாழ்கின்ற அண்டர்களின் பல பசுக்கள் தந்த நெய்யுடன்’ என்றும்
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுநாமமன்னர் துணிய நூறிக்கால்வல் புரவி அண்டர் ஓட்டி (ப.ப.88:7-9)
காற்றினைப் போல் விரைந்து செல்லும் குதிரைப்படை கொண்ட அண்டர்களை ஓட்டி’ என்றும் அண்டர்களைப் பற்றி சங்க பாக்கள் குறிப்புதருகின்றன.
அண்டர் என்னும் சொல் பொதுவாக பகைவர் எனப் பொருள்படும் அண்டார் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம்; அண்டர்களும் பொதுவர்களும் குறும்பர் எனப்பட்டனர் என்று துரை அரங்கசாமி குறிப்பிடுகிறார்.1 இவர்கள் ஆநிரைப் பேணும் ஆயர் தொழிலைச் செய்பவர்கள். இவர்களது தலைவன் கழுவுள் என்பவனாவான். இவரனது தலைநகரம் காமூர் என்பதாகும். இந்நகரம் தமிழகத்தின் வடவெல்லைக்கு வடக்கே, வட ஆரிய அரசுகளின் தெற்கெல்லைக்குத் தெற்கேயுள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.2
கழுவுள், பல குறுநில மன்னர்களைப் போரில் வென்றவனாவான். 14 வேளிர்களோடு போரிட்டான் என அகம் 135ஆம் பாடல் குறிப்பிடுகிறது. எருதுகளும் பசுக்களும் நிரம்ப உடைய கழுவுளின் வீரர்கள் புலவு நாற்றம் வீசும் தங்களுடைய வில்லைக் கொண்டு பகைப்புலத்திலிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வருவார்கள் என்றும், இவனது நாட்டில் பாலும் தயிரும், ஆய மகளிர் தயிரினின்று எடுக்கும் வெண்ணெயும் நிரம்பியிருக்கும் என்றும், இவன் கடம்பர்களுடன் இணைந்து சேரமானோடு பொருதான் என்றும், போரில் சேரமான் இவனது ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டான் என்றும், சேரமானது வீரர்கள் இவனது நாட்டையும் தலைநகரத்தையும் பாழ்படுத்தினர் என்றும், ஆவின் பயனாகிய பாலும் தயிரும் கொண்டு செல்வச் செருக்குடன் இருந்த வாழ்ந்த மக்களையுடைய இவன், சேரமானோடு பொருதபின், எப்போதும் காலையில் கேட்கும் தயிர் கடையும் ஒலி இல்லாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினான் என்றும், விருந்தினரை உபசரித்து வளமாக வாழ்ந்த இவனது நாட்டுமக்கள், தங்கள் செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு, பிறநாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அரிசில் கிழார் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தில் கூறுகிறார்.
இப்படி அண்டர்கள் குறித்துப் பயிலப்பட்டுள்ள செய்திகளின் மூலம் அண்டர்கள் கால்நடை மேய்க்கும் ஆயர் குடியினரின் ஒரு வகையினர் என்றும், அவர்கள் கழுவுள் என்பானின் கீழ் வாழ்ந்தனர் என்றும் பெறப்படுகிறது. போர் செய்யும் அளவிற்கு குதிரைப்படையைக் கொண்டிருந்த இவர்கள் யார், எப்போது இடம்பெயர்ந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதுநிற்க. இனி ஆபீரர்கள் குறித்து காண்போம்.
ஆபிரர்கள்
ஆபீரர்கள் என்றொரு குழுவினர் புராதண இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். தற்போது அஹீர்கள் என்று வழங்கப்படும் இவர்களைப் பற்றியத் தகவல்களாவன,
ஆபிரர்களின் தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல் குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள்.
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர் என்றும் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’ என்றும் தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர் எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார் அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு படுத்திப் பேசுகிறார். மேலும் அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில் வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர்கள் வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள் என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர் எனக் குறிப்பிடுகின்றார்.3
புராதண இந்தியா  எனும் பழைய 56 தேசங்கள் என்ற நூலை எழுதிய பி.வி.ஜகதீச ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி (குந்தல) தேசங்களுக்கு நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.
… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில் ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.4
என்று கூறுகின்றார்.
மேலும் ‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞரும் கூறுகின்றார். அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து  நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற ஹக் நெவில் எனும் அறிஞரும் கருதுகின்றனர்.’5
மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.6
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து, ஆபீரர்கள் என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
காலம்
பந்தர்க்கார், ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால் பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான) சூத்திரர்7 என்று பேசுவதால் இவரது காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே இவர்கள் வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ‘கி.மு.3இல் ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’8 என்று ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது, ஆபீரர்கள் கிறித்து பிறப்புக்குப் பல நூற்றாண்டுக்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அங்கிருந்து,  மகாபாரதம், புராணங்கள் குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம், சொளராஷ்டிரம், கொங்கணம் என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின் இனம்
ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலரும்நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று சிலரும் கருதுகின்றனர்.10 வேறு சில அறிஞர்கள் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் என்கின்றனர்11. ‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர்  என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர் என்று கூறியுள்ளதாக’12 சி.பி.லோகநாதன் தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு  இடையர், மாடுமேய்ப்பவர் என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு தக்க ஒரு சான்றாக, கிருஷ்ணன் இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி) இந்திரனுக்குப் படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி, “தந்தையே! நாம் உழவர்களுமல்லர், வணிகருமல்லர். இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும் மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’13 என்று தொ.பரமசிவம் கூறுகின்றார்.
கிருஷ்ணனுக்கும் ஆபீரர்களுக்குமான தொடர்பு
இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக, இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு புராணம், பால சரிதம்,  மகாபாரதம், பாகவதம் என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும், ஓர் இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றன.
கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான் என்பதை விஷ்ணு புராணம், பாகவதம், பாலசரிதம் உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன் யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவாக ஆராய வேண்டிய ஒன்றாகும்.
கிருஷ்ணன் யார்?
கிருஷ்ணன், ஆபிரர் என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் பீகார், சண்டிகர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி,  சட்டீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்ரகாண்ட் என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம், மேய்ச்சல் நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில்  பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி, ஆபிரர்களின் தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல் நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’14 என்று சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார்.  ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர் வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா, ஆனர்த்தா எனும் இடங்கள் வரை பரவியிருந்த ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’15 என்று ஆர்.ஜி.பந்தர்க்கார் கூறுகின்றார். டி.டி.கோசாம்பியும் கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம் துவங்கியபோது வாழ்ந்துவந்த ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’16 என்று கூறுகின்றார்.
கிருஷ்ணன் – ஆபீரர்தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும்  அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,

  • ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற  சொற்களும்  கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
  • ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
  • ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
  • ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
  • ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம்.
  • தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).

மகாபாரதத்தில் மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின் எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு. அதில் வருவதாவதுआभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’17அதாவது,
“ஓ முனிவர்களே… இதைக் கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால் அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என் கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.”
என்று அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால் போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று முன்பே கண்டோம்.
ஹரிவமிசம் முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள் உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள் என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற காரணங்களாலும், சான்றுகளின் படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
புராணங்கள், இதிகாசங்கள் யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன் என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத் தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இஃதுபற்றி வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று… பண்டைவேளிர் தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர் பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.18
கண்ணனது ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள் துவாரகையில் இருந்து, மராட்டிம், கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தனர்’19 என்று வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன் கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள், சாதவாகனர் கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார். கி.பி.181ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப் பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று கி.பி.3 சேர்ந்த ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.20 கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன் ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு, தென்னிந்தியப்பகுதியில் ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன் வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது.  இவர்களின் ஒரு பிரிவினரோ அல்லது  வேளிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம். அப்படியாயின் இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தமிழகம் வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’ வழிபாட்டோடு விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்’21 என்ற தொ.பரமசிவத்தின் கூற்று, மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார் சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம் நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில், கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
ஆஹிர் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவம் ஆபீர என்றும், ஆபீரர்களின் மொழி, ஆபீர பாஷா என்றும் இதனை பரதர், தம் நாட்டிய சாஸ்திரத்தில் ‘அபப்ரம்சத்’ என்றும் குறிப்பிடுகிறார் என்றும் எஸ்.இராமசந்திரன் குறிப்பிடுகின்றார்.22
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்று, கிருஷ்ணனின் பெண்களை அண்டர் மகளிர் என்று குறிக்கிறது
வாழியர் நீயே வடாஅதுவண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறைஅண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்மரம்செல மிதித்த மாஅல் போல (அகம்:59:3-6)
வடதிசையில் உள்ள யமுனைத் துறையில் நீராடும் அண்டர் மகளிரின் ஆடையை ஒளித்துப்பின் அவற்றைக் குருந்தமரக் கிளையை வளைத்துத் தந்த கண்ணபிரானைப் போல’ என்பது இதன் பொருளாகும்.
இங்கு அண்டர் மகளிரது ஆடையைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்தான் என்பது பெறப்படுகிறது. அண்டர் என்னும் சொல்லுக்கு அண்டி வாழ்வோர் என்றும் பொருளுண்டு. ஊர்புறத்தினையடுத்த பகுதிகளில் அவர்கள் தொகுப்பாக வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கலாம். தவிரவும் தமிழகத்தை அண்டி வந்தோர் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு, தமிழகத்தில் வாழ்ந்த அண்டர் குடி யமுனை நதி பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணனின் பெண்களோடு தொடர்புபடுத்தியிருப்பது இங்கு புதிய ஐயத்தை எழுப்பியுள்ளது. தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்த கிருஷ்ணனின் குடியினரில் அண்டர்களும் ஒரு பிரிவினராக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இதற்கான வலுவான சான்றுகள் ஏதும் இல்லை எனினும் இப்படி இணைத்து எண்ணவும் வழிவகையுண்டு. மேற்படி தொடராய்வுகள்தாம் இதற்கான தீர்வினைத் தரும்.

அடிக்குறிப்புகள்

  1. 1.   மொ.அ.துரை அரங்கசாமி, சங்க காலச் சிறப்பு பெயர்கள், பாரி நிலையம், 2014, ப.274
  2. மேலது, ப.274
  3. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
  4. பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
  5. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
  6. Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72.
  7. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
  8. மேலது, ப.107
  9. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
  10. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
  11. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
  12. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24
  13. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
  14. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104
  15. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
  16. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207
  17. மகாபாரதம், மௌசால பருவம்,  http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
  18. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47
  19. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
  20. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107
  21. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139
  22. 13, அக்டேபர் 2015 அன்று உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் கீழடி அகழ்வாய்வு பற்றிய ஒருநாள் கருத்தரங்கில் திரு. எஸ் இராமச்சந்திரன் அவர்கள் சொல்லிய செய்தி. அவருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்..